வெள்ளி, 28 செப்டம்பர், 2012

Some verss from Thiruvasagam, Thiruvisaippa and Thiruppallandu






திருமுன் பாட திருமுறைப் பாடல்கள் சில


Index
----------------------------------------------------------------------------------------------

திருவாசகம்

              1.    சிவபுராணம்

              2.    திருவெம்பாவை

              3.    திருச்சாழல்

              4.    திருப்பொன்னூசல்

              5.    திருப்பள்ளியெழுச்சி

              6.    அருட்பத்து

              7.    பிடித்தப்பத்து

திருவிசைப்பா - திருமளிகத்தேவர் 

திருப்பல்லாண்டு - சேந்தனார்



----------------------------------------------------------------------------------------------












திருவாசகச் சிறப்பு

தொல்லை யிரும்பிறவிச் சூழும் தளைநீக்கி

அல்லல் அறுத்து ஆனந்தமாக்கியதே

எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர்

எங்கோன் திருவாசகமேன்னும் தேன்


1. சிவபுராணம்

 
(திருப்பெருந்துறையில் அருளியது

தற்சிறப்புப் பாயிரம்)


நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5



வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க

புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க

கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க

சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10



ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி

தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி

நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி

சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15



ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்

அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்

சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை

முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20



கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி

எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி

விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,

எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்

பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25



புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30



எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற



மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35



வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா

பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி

மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே

எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40



ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்

போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்

நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே

மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45



கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்

சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று

பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்

நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த

மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50



மறைந்திட மூடிய மாய இருளை

அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி

புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,

மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை

மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55



விலங்கு மனத்தால், விமலா உனக்கு

கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்

நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி

நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60



தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே

தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே

பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே

நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65



பேராது நின்ற பெருங்கருணைப் போராறே

ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே

நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே

இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70



அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்

சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே

கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75



நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே

காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே

ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற

தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80



மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்

தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்

ஊற்றான உண்ணார் அமுதே உடையானே

வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப

ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85



போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்

மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே

கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே

நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே

தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90



அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று

சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

திருச்சிற்றம்பலம்




2. திருவெம்பாவை

 
(திருவண்ணாமலையில் அருளியது - சக்தியை வியந்தது)
(வெண்டளையான் வந்த இயற்றவிணை கொச்சகக் கலிப்பா)


ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்

சோதியை யாம்பாடக்கேட்டேயும் வாள்தடங்கள்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன்வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து

போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்

ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே

ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். 155



பாசம் பரஞ்சோதிக்கு அன்பாய் இராப்பகல்நாம்

பேசும்போ தெப்போ(து) இப் போதார் அமளிக்கே

நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்

சீசி இவையுஞ் சிலவோ விளையாடி

ஏசு மிடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குத்

கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்

தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்

ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய். 156



முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிரெழுந்தென்

அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்

தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்

பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்

புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ

எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ

சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை

இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். 157





ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ

வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ

எண்ணிக்கொண்டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்

கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே

விண்ணுக் கொருமருந்தை வேத விருப்பொருளைக்

கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்

உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டொம் நீயேவந்து

எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். 158



மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்

போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்

பாலாறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்

ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்

கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்

சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)

ஓலம் இடினும் உணராய் உணராய்காண்

ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய். 159



மானே நீ நென்னலை நாளை வந்துங்களை

நானே எழுப்புவன் என்றலும் நாணாமே

போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ

வானே நிலனே பிறவே அறிவரியான்

தானேவந் தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்

வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்

ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்

ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய். 160

 




அன்னே இவையுஞ் சிலவோ பலவமரர்

உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்

சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்

தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்

என்னானை என்அரையன் இன்னமுதுஎன்று எல்லாமும்

சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ

வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்

என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய். 161



கோழி சிலம்புச் சிலம்பும் குருகுஎங்கும்

ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்குஎங்கும்

கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை

கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ

வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்

ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ

ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை

ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய். 162



முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

பின்னைப் புதுமைக்கும் போத்தும் அப் பெற்றியனே

உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்

உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்

அன்னவரே எம்கணவர் ஆவர் அவர்உகந்து

சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்தோம்

இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்

என்ன குறையும் இலோம்ஏலார் எம்பாவாய். 163





பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்

போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே

பேதை ஒருபால் திருமேனி ஒன்று அல்லன்

வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்

ஓத உலவா ஒருதோழன் தொண்டர்உளன்

கோதில் குலத்தான் றன் கோயில் பிணாப்பிள்ளைகாள்

ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆர்உற்றார் ஆர்அயலார்

ஏதவரைப் பாடும் பரிசேலார் எம்பாவாய். 164



மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்

கையாற் குடைந்து குடைந்துஉன் கழல்பாடி

ஐயா வழியடி யோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல்போற்

செய்யா வெண்ணீறாடி செல்வ சிறுமருங்குல்

மையார் தடங்கண் மடந்தை மணவாளர்

ஐயாநீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்

உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந் தோங்

எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். 165



ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்துஆடும்

தீர்த்தன் நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்

கூத்தன்இவ்வானும் குவலயமும் எல்லாமும்

காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி

வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்

ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்

பூத்திகழும் பொய்கை குடைந்துஉடையான் பொற்பாதம்

ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய். 166





பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்

அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்

தங்கள் மலம்கழுவு வார் வந்து சார்தலினால்

எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த

பொங்கும் மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்

சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப்

கொங்கைகள் பொங்கப் குடையும் புனல்பொங்கப்

பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். 167



காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்

கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்

சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி

வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி

சோதித்திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி

ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்

பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வதைதன்

பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய். 168



ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்

சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர

நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்

பாரொருகால் வந்தனையான் விண்ணோரைத் தான் பணியாள்

பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும்

ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்

வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி

ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 169

 




முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துஉடையான்

என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையான் இட்டிடையின்

மின்னப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்

பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்

என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்

தன்னிற் பரிவிலா எங்கோமான் அன்பர்க்கு

முன்னி யவன்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே

என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய். 170



செங்க ணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்

எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக்

கொங்குஉண் சுருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி

இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்

செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை

அங்கள் அரசை அடியோங்கட்கு ஆரமுதை

நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்

பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 171



அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்

விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்

கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்

தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப்

பெண்ணாகி ஆணாய் அலியாய்ப பிறங்கொளிசேர்

விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகித்

கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்

பெண்ணே இப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 172



உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று

அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்

எங்கள் பெருமான் உனக்கென்று உரைப்போம் கேள்

எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க

எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க

கங்குல் பகல்எங்கண் மற்றொன்றும் காணற்க

இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்

எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய். 173



போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்

போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்

போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்

போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்

போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்

போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய். 174

திருச்சிற்றம்பலம்


3. திருச்சாழல்

( சிவனுடைய காருணியம்)


(தில்லையில் அருளியது /நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)


பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்

பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ

பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டடென்னை

ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ. 255



என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந் தானீசன்

துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ?

மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத்

தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ. 256



கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை

தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ

தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும்

காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ. 257



அயனை அனங்கனை அந்தகளைச் சந்திரனை

வயனங்கள் மாயா வடுச்செய்தான் காணேடீ

நயனங்கள் மூன்றுடை நாயகனே தண்டித்தால்

சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ. 258



தக்கனையும் எச்சையும் தலையறுத்துத் தேவர்கணம்

தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ?

தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்தருளி அருள்கொடுத்தங்கு

எச்சனுக்கு மிகைத்தலைமற் றருளினன் காண் சாழலோ. 259



அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய்

நிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுதான் என்னேடீ?

நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம்

சலமுகத்தால் ஆங்காரந் தவிரார்காண் சாழலோ. 260



மலைமகளை யொருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி

சலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னேடீ?

சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம்

பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ. 261



கோலால மாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த

ஆலாலம் உண்டான் அவன்சதுர்தான் என்னேடீ?

ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட

மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ. 262



தென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன்

பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடீ

பெண்பா லுகந்திலனேற் பேதாய் இரு நிலத்தோர்

விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ. 263



தானந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை

ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் காணேடீ

ஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள்

வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ. 264



நங்காய் இதென்னதவம் நரம்போ டெலும்பணிந்து

கங்காளந் தோள்மேலே காதலித்தான் காணேடீ

கங்காளம் ஆமாகேள் காலாந்த ரத்திருவர்

தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ. 265



கானார் புலித்தோல் உடைதலைஊண் காடுபதி

ஆனா லவனுக்கிங் காட்படுவார் ஆரேடி?

ஆனாலும் கேளாய் அயனுந் திருமாலும்

வானாடர் கோவும் வழியடியார் சாழலோ. 266



மலையரையன் பொற்பாவை வாள்நுதலான் பெண்திருவை

உலகறியத் தீவேட்டான் என்னுமது என்னேடீ

உலகறியத் தீவேளே தொழிந்தனனேல் உலகனைத்துங்

கலைநவின்ற பொருள்களெல்லாங் கலங்கிடுங்காண் சாழலோ. 267



தேன்புக்க தண்பனைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்

தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ?

தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம்

ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ. 268



கடகரியும் பரிமாவும் தேரும்உகந் தேறாதே

இடபம்உகந் தேறியவா றெனக்கறிய இயம்பேடீ

தடமதில்கள் அவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில்

இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ. 269



நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை

அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடீ

அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் ஆயிடினுங்

கொன்றான்காண் புரமூன்றுங் கூட்டோ டே சாழலோ. 270



அம்பலத்தே கூத்தாடி அமுதுசெயப் பலிதரியும்

நம்பனையுந் தேவனென்று நண்ணுமது என்னேடீ?

நம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியோ

எம்பெருமான் ஈசாவென் றேத்தினகாண் சாழலோ. 271



சலமுடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி

நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ?

நலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தானடிக்கீழ்

அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ. 272



அம்பரமாம் புள்ளித்தோல் ஆலாலம் ஆரமுதம்

எம்பெருமான் உண்டசதுர் எனக்கறிய இயம்பேடீ

எம்பெருமான் ஏதுடுத்தங் கேதமுது செய்திடினும்

தம்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ. 273



அருந்தவருக் காலின்கீழ் அறமுதலா நான்கினையும்

இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீ?

அருந்தவருக் கறமுதல்நான் கன்றருளிச் செய்திலனேல்

திருந்தவருக் குலகியற்கை தெரியாகாண் சாழலோ. 274

திருச்சிற்றம்பலம்


4. திருப்பொன்னூசல்


( அருட் சுத்தி)

(தில்லையில் அருளியது - ஆறடித்தரவு கொச்சகக் கலிப்பா)



சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக

ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து

நாரா யணன் அறியா நாண்மலர்த்தான் நாயடியேற்கு

ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை

ஆரா அமுதின் அருள்தா ளிணைப்பாடிப்

போரார் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ. 329



மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத

வான்தங்கு தேவர்களுங் காணா மலரடிகள்

தேனதங்கித் தித்தித் தமுதூறித் தான்தெளிந்தங்கு

ஊன்தங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக்

கோன்தங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை

போன்றங் கனநடையீர் பொன்னூசல் ஆடாமோ. 330



முன்னீறும் ஆதியு மில்லான் முனிவர்குழாம்

பன்னூறு கோடி யிமையோர்கள் தாம் நிற்பத்

தன்னீ றெனக்குருளித் தன்கருணை வெள்ளத்து

மன்னூற மன்னுமணி யுத்தர கோசமங்கை

மின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப்

பொனனேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 331



நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன்

மஞ்சுதோய் மாடமணி உத்தரகோசமங்கை

அஞ்சுசொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள்

நெஞ்சுளே நின்றமுத மூறிக் கருணைசெய்து

துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப்

புஞ்சுமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ. 332



ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர்

காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்

நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை

ஊணாக உண்டருளும் உத்தர கோமங்கைக்

கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்

பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ. 333



மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கைத்

தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்

கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித்

தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான்

காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால்

போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 334



உன்னற் கரியதிரு வுத்தர கோசமங்கை

மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே

பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான்

அன்னத்தின் மேலேறி ஆடுமணி மயில்போல்

என்னத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடிப்

பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 335



கோலவரைக்குடுமி வந்து குவலத்துச்

சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து

ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்

சீலந் திகழுந் திருவுத்தர கோசமங்கை

மாலுக் கரியானை வாயார நாம்பாடிப்

பூலித் தகழ்குழைந்து பொன்னூசல் ஆடாமோ. 336



தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை

தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி

எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்

பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட

கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்

பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 337

திருச்சிற்றம்பலம்


5. திருப்பள்ளியெழுச்சி


(  திரோதான சுத்தி )

(திருப்பெருந்துறையில் அருளியது -எண்சீர் கழி நெழிலடி ஆசிரிய விருத்தம் )



போற்றியென் வாழ்முத லாகிய பொருளே

புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்

டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்

எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்

சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்

திருப்பெருந் துறை உறை சிவபெருமானே

ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்

எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 368



அருணண்இந்திரன் திசை அணுகினன் இருள்போய்

அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்

கருனையின் சூரியன் எழவெழ நயனக்

கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம்

திரள்நிரை அருள்பதம் முரல்வன இவையோர்

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே

அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே

அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே. 369



கூவின பூங்குயில் கூவின கோழி

குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்

ஓவின தாரகை ஒளியொளி உதயத்து

ஓருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்

தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே

யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்

எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 370



இன்னிசை வீணையார் யாழினர் ஒருபால்

இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்

துன்னிய பிணைமலர்க் கையினர் துவள்கையர் ஒருபால்

தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்

திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே

என்னையும் ஆண்டுகொண்டின்னருள் புரியும்

எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 371



பூதங்கள் தோறும்நின் றாய்எனின் அல்லால்

போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்

கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்

கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்

சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா

சிந்தனைக் கும்அரியாய் எங்கள் முன்வந்து

ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்

எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 372



பப்பற விட்டிருந்து உணரும்நின் அடியுaர்

பந்தனை வந்தறுத் தார் அவர் பலரும்

மைப்பறு கண்ணியர் மானுடத் தியல்பின்

வணங்குகின்றார் அணங் கின்மண வாளா

செப்புறு கமலங்கண் மலரும்தண் வயல்சூழ்

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே

இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்

எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 373



அது பழச்சுவையென அமுதென அறிதற்கு

அரிதென எளிதென அமரும் அறியார்

இது அவன் திருவுரு இவன் அவன் எனவே

எங்களை ஆண்டுகொணடு இங் கெழுந்தருளும்

மதுவளர் பொழில்திரு உத்தர கோச

மங்கையுள்ளாய்திருப் பெருந்துறை மன்னா

எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்

எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே. 374



முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்

மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்

பந்தணை விரலியும் நீயும்நின்னடியார்

பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே

செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்

திருப்பெருந் துறையறை கோயிலும் காட்டி

அந்தணன் ஆவதும் காட்டிவந் தாண்டாய்

ஆரமுதே பள்ளி யெழுந்தருள்யே. 375



விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா

விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்

மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே

வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்

கண்ணகத் தேநின்று களிதரு தேனே

கடலமு தேகரும் பேவிரும் படியார்

எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்

எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே. 376



புவனியில் போய்ப்பிற வாமையின் நாள்நாம்

போக்குகின் றோம்அவ மேஇந்தப்பூமி

சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்

திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்

அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்

படவும்நின் அவர்தம்மெய்க்கருணையும் நீயும்

அவணியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்

ஆரமு தேபள்ளி யெழுந்தருளாயே. 377

திருச்சிற்றம்பலம்

6. அருட்பத்து


(  மகாமாயா சுத்தி )
(திருப்பெருந்துறையில் அருளியது -

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)



சோதியே சுடரே சூழொளி விளக்கே

         சுரிசூழற் பணைமுலை மடந்தை

பாதியே பரனே பால்கொள்வெண்ணீற்றாய்

         பங்கயத் தயனுமா லறியா

நீதியே செல்வத் திருப்பெருந்துறையில்

         நிறைமலர்க் குருந்தமே வியசீர்

ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்

        அதெந்துவே என் றரு ளாயே. 458



நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக்

        கண்ணனே விண்ணுளோர் பிரானே

ஒருத்தனே உன்னை ஓலமிட்டலறி

        உலகெலாந் தேடியுந் காணேன்

திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந்துறையில்

        செழுமலர்க் குருந்தமே வியசீர்

அருத்தமே அடியேன் ஆதரித் தழைத்தால்

        அதெந்துவே என்றரு ளாயே. 459



எங்கள்நாயகனே என்னுயிர்த் தலைவா

        ஏலவார் குழலிமார் இருவர்

தங்கள் நாயகனே தக்கநற்காமன்

        தனதுடல் தழலெழ விழித்த

செங்கண்நாயகனே திருப்பெருந்துறையில்

       செழுமலர்க் குருந்தமே வியசீர்

அங்கணா அடியேன் ஆதரித் தழைத்தால்

       அதெந்துவே என்றருளாயே. 460



கமலநான்முகனுங் கார்முகில் நிறத்துக்

        கண்ணனும் நண்ணுதற்கரிய

விமலனே எமக்கு வெளிப்படா யென்ன

       வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்

திமிலநான் மறைசேர் திருப்பெருந்துறையில்

       செழுமலர்க் குருந்தமே வியசீர்

அமலனே அடியேன் ஆதரித் தழைத்தால்

       அதெந்துவே என்றரு ளாயே. 461



துடிகொள்நே ரிடையாள் சுரிகுழல் மடந்தை

        துணைமுலைக் கண்கள்தோய் சுவடு

பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோ லிரண்டு

        பொங்கொளி தங்குமார் பின்னே

செடிகொள்வான் பொழிலசூழ் திருப்பெருந்துறையில்

         செழுமலர்க் குருந்தமே வியசீர்

அடிகளே அடியேன் ஆதரித் தழைத்தால்

          அதெந்துவே என்றரு ளாயே. 462



துப்பனே தூயாய் தூய  வெண்ணீறு

          துதைந்தெழு துளங்கொளி வயிரத்

தொப்பனே உன்னை உள்குவார் மனத்தின்

          உறுசுவை துளிக்கும் ஆரமுதே

செப்பமா மறைசேர் திருப்பெருந் துறையில்

         செழுமலர்க் குருந்தமே வியசீர்

அப்பனே அடியேன் ஆதரித் தழைத்தால்

         அதெந்துவே என்றரு ளாயே. 463



மெய்யனே விகிர்தா மேருவே வில்லா

         மேலவர் புரங்கள் மூன்றெரித்த

கையனே காலாற் காலனைத் காய்ந்த

         கடுந்தழற் பிழம்பன்ன மேனிச்

செய்யனே செல்வத் திருப்பெருந்துறையில்

         செழுமலர்க் குருந்தமே வியசீர்

ஐயனே அடியேன் ஆதரித் தழைத்தால்

         அதெந்துவே என்றரு ளாயே. 464



முத்தனே முதல்வா முக்கணா முனிவா

         மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப்

பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்

          பரகதி கொடுத்தருள் செய்யுஞ்

சித்தனே செல்வத் திருப்பெருந்துறையில்

          செழுமலர்க் குருந்தமே வியசீர்

அத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்

          அதெந்துவே என்றரு ளாயே. 465



மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி

          மறுமையோ டிம்மையுங் கெடுத்த

பொருளணே புனிதா பொங்குவா ளரவங்

          கங்கைநீர் தங்குசெஞ் சடையாய்

தெருளுநான் மறைசேர் திருப்பெருந்துறையில்

          செழுமலர்க் குருந்தமே வியசீர்

அருளனே அடியேன் ஆதரித் தழைத்தால்

          அதெந்துவே என்றரு ளாயே. 466



திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந்துறையில்

          செழுமலர்க் குருந்தமே வியசீர்

இருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட்

          டென்னுடை யெம்பிரான் என்றென்

றருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால்

          அலைகடல் அதனுளே நின்று

பொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண்

           போதராய் என்றளு ளாயே. 467

திருச்சிற்றம்பலம்


7. பிடித்த பத்து


(  முத்திக்கலப்புரைத்தல் )
(திருத்தோணிபுரத்தில் அருளியது - எழுசீர் ஆசிரிய விருத்தம்)

 
உம்பர்கட்கரசே ஒழிவறநிறைந்த யோகமே

           ஊற்றை  யேன் தனக்கு

வம்பெனப் பழுத்தென் குடிமுழு  தாண்டு

           வாழ்வற வாழ்வித்த மருந்தே

செம்பொருட் டுணிவே சீருடைக்  கழலே

            செல்வமே சிவ  பெருமானே

எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

           எங்கெழுந் தருளுவ தினியே.



விடைவிடா துகந்த விண்ணவர் கோவே

           வினையனே னுடையமெய்ப் பொருளே

முடைவிடா தடியேன் மூத்தற  மண்ணாய்

           முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து

கடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட

           கடவுளே கருணைமா கடலே

இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

            எங்கெழுந் தருளுவ தினியே. 537



அம்மையே அப்பா ஒப்பிலா மணியே

             அன்பினில் விளைந்த ஆரமுதே

பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்

             புழுத்தலைப் புலையனேன் தனக்குச்

செம்மையே ஆய சிவபதம் அளித்த

              செல்வமே சிவ  பெருமானே

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

              எங்கெழுந் தருளுவ தினியே. 538



அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே

              பெருந்திறல் அருந்தவர்க் கரசே

பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த

              போகமே யோகத்தின் பொலிவே

தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த

              செல்வமே சிவ  பெருமானே

இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

               எங்கெழுந் தருளுவ தினியே. 539



ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன்


               உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே

மெய்ப்பதம் அறியா வீறிலியேற்கு விழுமிய

               தளித்த  தோர் அன்பே

செப்புதற் கரிய செழுந்சுடர் மூர்த்தீ

               செல்வமே சிவ  பெருமானே

எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

               எங்கெழுந் தருளுவ தினியே. 540



அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்டு

              அளவிலா ஆனந்த மருளிப்

பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட

              பிஞ்ஞகா பெரியஎம் பெருளே

திறவிலே கண்ட காட்சியே அடியேன்

               செல்வமே சிவ  பெருமானே

இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

               எங்கெழுந் தருளுவ தினியே. 541



பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப்

               பற்றுமா றடியனேற் கருளிப்

பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து

               பூங்கழல் காட்டிய பொருளே

தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ

               செல்வமே சிவபெருமானே

ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

               எங்கெழுந் தருளுவ தினியே. 542



அத்தனே அண்டார் அண்டமாய் நின்ற

              ஆதியே யாதும்ஈ றில்லாச்

சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த

              செல்வமே சிவ  பெருமானே

பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப்

              பிழைத்தவை அல்லையாய் நிற்கும்

எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

              எங்கெழுந் தருளுவ தினியே. 543



பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப்

               பரிந்துநீ பாவியே னுடைய

ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி

               உலப்பிலா ஆனந்த மாய

தேனினைச் சொரிந்து புறம்புறந்  திரிந்த

               செல்வமே சிவ பெருமானே

யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்

               எங்கெழுந் தருளுவ தினியே. 544



புன்புலால் யாக்கை புரைபுரை கனியப்

                பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்

என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட

                ஈசனே மாசிலா மணியே

துன்பமே பிறப்பே இறப்போடு மயக்காந்

               தொடக்கெலாம் அறுத்தநற்  சோதி

இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

               எங்கெழுந் தருளுவ தினியே. 545

திருச்சிற்றம்பலம்






திருமாளிகைத் தேவர் அருளிய திருவிசைப்பா




1. கோயில்

ஒளிவளர் விளக்கே உவப்பிலா ஒன்றே !

       உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே !

தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே !

       சித்தத்துள் தித்திக்கும் தேனே !

அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே !
       அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
       தொண்டனேன் விளம்புமா விளம்பே. 1

இடர்கெடுத்(து) என்னை ஆண்டுகொண்(டு) என்னுள்
       இருட்பிழம்பு அறஎறிந்(து) எழுந்த
சுடர்மணி விளக்கின் உள்ளளி விளங்கும்
       தூயநற் சோதியுள் சோதீ !
அடல்விடைப் பாகா ! அம்பலக் கூத்தா !
       அயனொடு மாலறி யாமைப்
படரொளிப் பரப்பிப் பரந்துநின் றாயைத்
       தொண்டனேன் பணியுமா பணியே. 2

தற்பரம் பொருளே ! சசிகண்ட ! சிகண்டா !
       சாமகண்டா ! அண்ட வாணா !

நற்பெரும் பொருளாய் உரைகலந்து உன்னை

       என்னுடை நாவினால் நவில்வான்

அற்பன்என் உள்ளத்து அளவிலா உன்னைத்

       தந்தபொன் அம்பலத்து ஆடி !

கற்பமாய் உலகாய் அல்லையா னையைத்

       தொண்டனேன் கருதுமா கருதே. 3


பெருமையிற் சிறுமை பெண்ணொடுஆ ணாய்என்

       பிறப்புஇறப்பு அறுத்தபே ரொளியே !

கருமையின் வெளியே கயற்கணாள் இமவான்

       மகள்உமை யவள்களை கண்ணே !

அருமையின் மறைநான் கோலமிட் டரற்றும்

       அப்பனே அம்பலத்து அமுதே

ஒருமையிற் பலபுக்கு உருவிநின் றாயைத்

       தொண்டனேன் உரைக்குமாறு உரையே. 4


கோலமே மேலை வானவர் கோவே !

       குணங்குறி இறந்ததோர் குணமே !

காலமே கங்கை நாயகா எங்கள்

       காலகா லா! காம நாசா !

ஆலமே அமுதுண்டு அம்பலம் செம்பொன்

       கோயில்கொண்டு ஆடவல் லானே !

ஞாலமே தமியேன் நற்றவத் தாயைத்

       தொண்டனேன் நணுகுமா நணுகே. 5


நீறணி பவளக் குன்றமே ! நின்ற

       நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே !

வேறணி புவன போகமே யோக

       வெள்ளமே மேருவில் வீரா !

ஆறணி சடையெம் அற்புதக் கூத்தா

       அம்பொன்செய் அம்பலத் தரசே !

ஏறணி கொடியெம் ஈசனே, உன்னைத்

       தொண்டனேன் இசையுமாறு இசையே. 6


தனதன்நல் தோழா சங்கரா ! சூல

       பாணியே! தாணுவே சிவனே !

கனகநல் தூணே! கற்பகக் கொழுந்தே

       கண்கள்மூன் றுடையதோர் கரும்பே !

அனகனே குமர விநாயக சனக

       அம்பலத்து அமரசே கரனே !

உனகழல் இணையென் நெஞ்சினுள் இனிதாத்

       தொண்டனேன் நுகருமா நுகரே. 7


திறம்பிய பிறவிச் சிலதெய்வ நெறிக்கே

       திகைக்கின்றேன் தனத்திகை யாமே

நிறம்பொன்னும் மின்னும் நிறைந்தசே வடிக்கீழ்

       நிகழ்வித்த நிகரிலா மணியே !

அறம்பல திறங்கொண்டு அருந்தவர்க்கு அரசாய்

       ஆலின்கீழ் இருந்தஅம் பலவா !

புறஞ்சமண் புத்தர் பொய்கள்கண் டாயைத்

       தொண்டனேன் புணருமா புணரே. 8


தக்கன்நல் தலையும் எச்சன்வன் தலையும்

       தாமரை நான்முகன் தலையும்

ஒக்கவிண்(டு) உருள ஒண்திருப் புருவம்

       நெறித்தரு ளியவுருத் திரனே !

அக்கணி புலித்தோல் ஆடைமேல் ஆட

       ஆடம்பொன் னம்பலத்து ஆடும்

சொக்கனே ! எவர்க்கும் தொடர்வரி யாயைத்

       தொண்டனேன் தொடருமா தொடரே. 9


மடங்கலாய்க் கனகன் மார்புகீண் டானுக்கு

       அருள்புரி வள்ளலே ! மருளார்

இடங்கொள்முப் புரம்வெந்து அவியவை திகத்தேர்

       ஏறிய ஏறுசே வகனே !

அடங்கவல் அரக்கன் அருள்திரு வரைக்கீழ்

       அடர்த்தபொன் னம்பலத் தரசே !

விடங்கொள்கண் டத்துஎம் விடங்கனே ! உன்னைத்

       தொண்டனேன் விரும்புமா விரும்பே. 10


மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டாது

       அயன்திரு மாலொடு மயங்கி

முறைமுறை முறையிட்(டு) ஓர்வரி யாயை

       மூர்க்கனேன் மொழிந்தபுன் மொழிகள்

அறைகழல் அரன்சீர் அறிவிலா வெறுமைச்

       சிறுமையில் பொறுக்கும்அம் பலத்துள்

நிறைதரு கருணா நிலயமே ! உன்னைத்

       தொண்டனேன் நினையுமா நினையே. 11


திருச்சிற்றம்பலம்


--0--





10. சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு



கோயில் மன்னுக




மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்

       வஞ்சகர் போயகல

பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து

       புவனி யெல்லாம் விளங்க

அன்னநடை மடவாள் உமைகோன்

       அடியோ முக்கருள் புரிந்து

பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த

       பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே. 1


மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள்

       விரைந்து வம்மின்

கொண்டுங் கொடுத்தும் குடிகுடி ஈசற்(கு)

       ஆட் செய்மின் குழாம்புகுந்து

அண்டங் கடந்த பொருள்அள வில்லதோர்

       ஆனந்த வெள்ளப்பொருள்

பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள்

       என்றே பல்லாண்டு கூறுதுமே. 2


நிட்டையி லாவுடல் நீத்தென்னை ஆண்ட

       நிகரிலா வண்ணங்கள்

சிட்டன் சிவனடி யாரைச்

       சீராட்டும் திறங்களுமே சிந்தித்(து)

அட்ட மூர்த்திக்கென் அகம்நெக

       ஊறும் அமிர்தினுக்(கு) ஆலநீழற்

பட்டனுக்(கு) என்னைத்தன் பாற்படுத்

       தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 3


சொல்லாண் டசுரு திருப்பொருள் சோதித்த

       தூய்மனத் தொண்டருள்ளீர்

சில்லாண் டிற்சிறை யும்சில

       தேவர் சிறுநெறி சேராமே

வில்லாண் டகன கத்திரன்

       மேரு விடங்கன் விடைப்பாகன்

பல்லாண் டென்னும் பதங்கடந்

       தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 4


புரந்தரன் மாலயன் பூசலிட்(டு)

       ஓலமிட்(டு) இன்னம் புகலரிதாய்

இரந்திரந்(து) அழைப்பஎன் னுயிராண்ட

       கோவினுக்(கு) என்செய வல்லம் என்றும்

கரந்துங் கரவாத கற்பக

       னாகிக் கரையில் கருணைக்கடல்

பரந்தும் நிரந்தும் வரம்பிலாப்

       பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே. 5


சேவிக்க வந்தயன் இந்திரன்

       செங்கண்மால் எங்கும்திசை திசையென

கூவிக் கவர்ந்து நெருங்கிக்

       குழாம்குழ மாய் நின்று கூத்தாடும்

ஆவிக்(கு) அமுதைஎன் ஆர்வத்

       தனத்தினை அப்பனை ஒப்பமார்

பாவிக்கும் பாவகத்(து) அப்புறத்

       தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 6


சீரும் திருவும் பொலியச் சிவலோக

       நாயகன் சேவடிக்கீழ்

ஆரும் பெறாத அறிவு பெற்றேன்

       பெற்றதார் பெறுவார் உலகில்?

ஊரும் உலகும் கழற உளறி

       உமைமண வாளனுக்(கு)ஆம்

பாரும் விசும்பும் அறியும்

       பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே. 7


சேலுங் கயலும் திளைக்கும் கண்ணார்இளங்

       கொங்கையில் செங்குங்குமம்

போலும் பொடியணி மார்பிலங் குமென்று

       புண்ணியர் போற்றிசைப்ப

மாலும் அயனும் அறியா நெறி

       தந்து வந்தென் மனத்தகத்தே

பாலும் அமுதமு ஒத்துநின்

       றானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 8


பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிடப்

       பாற்கடல் ஈந்தபிரான்

மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்

       மன்னிய தில்லைதன்னுள்

ஆவிக்கும் அந்தணர் வாழ்கின்ற

       சிற்றம் பலமே இடமாகப்

பாலித்து நட்டம் பயிலவல்

       லானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 9


தாதையைத் தாளற வீசிய சண்டிக்(கு)

       இவ் அண்டத்தொடும் உடனே

பூதலத் தோரும் வணங்கப்பொற்

       கோயிலும் போனகமும் அருளிச்

சோதி மணிமுடித் தாமமும் நாமமும்

       தொண்டர்க்கு நாயகமும்

பாதகத் துக்குப் பரிசுவைத்

       தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 10


குழலொலி யாழொலி கூத்தொலி ஏத்தொலி

       எங்கும் குழாம்பெருகி

விழவொலி விண்ணளவும் சென்று

       விம்மி மிகுதிரு ஆருரின்


மழவிடை யாற்கு வழிவழி யாளாய்

       மணஞ்செய் குடிப்பிறந்த

பழஅடி யாரொடுங் கூடி

       எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 11


ஆரார் வந்தார்? அமரர் குழாத்தில்

       அணியுடை ஆதிரைநாள்

நாராயணனொடு நான்முகன் அங்கி

       இரவியும் இந்திரனும்

தேரார் வீதியில் தேவர் குழாங்கள்

       திசையனைத்தும் நிறைந்து

பாரார் தொல்புகழ் பாடியும்

       ஆடியும் பல்லாண்டு கூறுதுமே. 12


எந்தை எந்தாய் சுற்றும் முற்றும் எமக்கு

       அமுதாம் எம்பிரான் என்றென்று

சிந்தை செய்யும் சிவன்சீர் அடியார்

       அடிநாய் செப்புறை

அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப்புகழ்

       தாண்டுகொண் டாருயிர்மேல்

பந்தம் பிரியப் பரிந்தவனே

       என்று பல்லாண்டு கூறுதுமே. 13.


திருச்சிற்றம்பலம்


--0--

கருவூரார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக