வெள்ளி, 28 செப்டம்பர், 2012

Thiru Mandhram by Thirumoolar (paayiram)












திருமூலர் அருளிய திருமந்திரம் (பாயிரம்)


விநாயகர் காப்பு

ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.






பாயிரம்

1. கடவுள் வாழ்த்து

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்

நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து

வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்

சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே. 1


போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை

நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கும் நாதனை

மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்

கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே. 2


ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்

நக்கனென்று ஏத்திடும் நாதனை நாள்தொறும்

பக்கநின் றார்அறி யாத பரமனைப்

புக்குநின்று உன்னியான் போற்றிசெய் வேனே. 3


அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்

புகலிடத்து என்றனைப் போதவிட் டானைப்

பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி

இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே. 4


சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை

அவனொடுஒப் பார் இங்கு யாவரும் இல்லை

புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்

தவனச் சடைமுடித் தாமரை யானே. 5






அவனை ஒழிய அமரரும் இல்லை

அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை

அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை

அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே. 6


முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன்

தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லாத் தலைமகன்

தன்னைஅப் பாயெனில் அப்பனு மாயுளன்

பொன்னைஒப் பாகின்ற போதகத் தானே. 7


தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்

ஆயினும் ஈசன் அருளறி வாரில்லை

சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத்

தாயினும் நல்லன் தாழ்சடை யோனே. 8


பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்

பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி

என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்

தன்னால் தொழப்படு வாரில்லை தானே. 9


தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்

தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்

தானே மழைபொழி தையலு மாய்நிற்கும்

தானே தடவரை தண்கட லாமே. 10


அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்

இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை

முயலும் முயலில் முடிவும் மற் றாங்கே

பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே. 11


கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்

எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்

மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்

அண்ணல் இவன் என்றுஅறியகி லார்களே. 12


மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்

எண்ணளந் தின்னும் நினைக்கிலார் ஈசனை

விண்ணளந் தாந்தன்னை மேலளந் தாரில்லை

கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே. 13


கடந்துநினின் றான்கம லம்மல ராதி

கடந்துநின் றான்கடல் வண்ணம்எம் மாயன்

கடந்துநின் றான்அவர்க்கு அப்புறம் ஈசன்

கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே. 14


ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற

வேதியு மாய்விரிந்துஆர்ந்துஇருந் தான்அருள்

சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்

நீதியு மாய்நித்த மாகிநின் றானே. 15


கோது குலாவிய கொன்றைக் குழற்சடை

மாது குலாவிய வாள்நுதல் பாகனை

யாது குலாவி அமரரும் தேவரும்

கோது குலாவிக் குணம்பயில் வாரே. 16


காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும்

மாயங் கத்தூரி யதுமிகும் அவ்வழி

தேசங் கலந்தொரு தேவனென் றெண்ணினும்

ஈசன் உறவுக் கெதிரில்லை தானே. 17


அதிபதி செய்து அளகை வேந்தனை

நிதிபதி செய்த நிறைதவம் நோக்கி

அதுபதி ஆதரித்து ஆக்கமது ஆக்கின்

இதுபதி கொள்என்ற எம்பெரு மானே. 18


இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும்

முதுபதி செய்தவன் மூதறி வாளன்

விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி

அதுபதி யாக அமருகின் றானே. 19


முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த

அடிகள் உறையும் அறனெறி நாடில்

இடியும் முழக்கமும் ஈசர் உருவம்

கடிமலர்க் குன்ற மலையது தானே. 20


வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்

ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்

கானக் களிறு கதறப் பிளந்தனம்

கோனைப் புகழுமின் கூடலு மாமே. 21


மனத்தில் எழுகின்ற மாயநன் நாடன்

நினைத்தது அறிவன் என்னில்தான் நினைக்கிலர்

எனக்குஇறை அன்பிலன் என்பர் இறைவன்

பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே. 22


வல்லவன் வன்னிககு இறையிடை வாரணம்

நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை

இல்லென வேண்டா இறையவர் தம்முதல்

அல்லும் பகலும் அருளுகின் றானே. 23


போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்அடி

தேற்றுமின் என்றும் சிவனடிக் கேசெல்வம்

ஆற்றிய தென்று மயலுற்ற சிந்தையை

மாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே. 24


பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்

இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்

துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்

மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே. 25


தொடர்ந்துனின் றானைத் தொழுமின் தொழுதால்

படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்

கடந்துநின் றாம்கம லம்மலர் மேலே

உடந்திருந் தான்அடிப் புண்ணிய மாமே. 26


சந்தி எனத்தக்க தாமரை வாண்முகத்து

அந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று

நந்தியை நாளும் வணங்கப் படும்அவர்

புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே. 27


இணங்கிநின் றான் எங்கும் ஆகிநின் றானும்

பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்

உணங்கிநின் றான்அம ராபதி நாதன்

வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே. 28


காணநில் லாய்அடி யேற்குஉறவுஆருளர்

நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்

கோணநில் லாத குணத்தடி யார்மனத்து

ஆணியன் ஆகி அமர்ந்துநின் றானே. 29


வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்

தானினறு அழைக்கும்கொல் என்று தயங்குவார்

ஆன்நின்று அழைக்கு மதுபோல்என் நந்தியை

நான்நின்று அழைப்பது ஞானம் கருதியே. 30


மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்

விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்

பண்ணகத்து இன்னிசை பாடலுற் றானுக்கே

கண்ணகத் தேநின்று காதலித் தேனே. 31


தேவர் பிரான்நம் பிரான்திசை பத்தையும்

மேவு பிரான்விரி நீருலகேழையும்

தாவு பிரான்தன்மை தானறி வாரில்லை

பாவு பிரான்அருட் பாடலு மாமே. 32


பதிபல வாயது பண்டுஇவ் வுலகம்

விதிபல செய்தொன்றும் மெய்ம்மை உணரார்

துதிபல தோத்திரம் சொல்ல வல்லாரும்

மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே. 33


சாந்து கமழுங் கவா஢யின் கந்தம்போல்

வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி

ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்

போந்தும் இருந்தும் புகழுகின் றேனே. 34


ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்

போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்

மேற்றிசைக் கும்கிழக் குத்திசை எட்டொடு

மாற்றுவன் அப்படி ஆட்டவு மாமே. 35


அப்பனை நந்தியை ஆரா அமுதினை

ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை

எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்

அப்பரி சீசன் அருள்பெற லாமே. 36


நானும்நின் றேத்துவன் நாள்தொறும் நந்தியைத்

தானும்நின் றான்தழல் தான்ஒக்கும் மேனியன்

வானில்நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்து

ஊனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே. 37


பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப்

பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப்

பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப்

பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் தானே. 38


வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்

தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை

ஏத்தியும் எம்பெரு மான்என்றுஇறைஞ்சியும்

ஆத்தம் செய் தீசன் அருள்பெற லாமே. 39


குறைந்துஅடைந் தீசன் குரைகழல் நாடும்

நிறைந்துஅடை செம்பொனின் நேர்ஒளி ஒக்கும்

மறைஞ்சடம் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப்

புறஞ்சடம் செய்வான் புகுந்துநின் றானே. 40


சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்

புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குக்

கனஞ்செய்த வாள்நுதல் பாகனும் அங்கே

இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே. 41


போய்அரன் தன்னைப் புகழ்வார் பெறுவது

நாயக னான்முடி செய்தது வேநல்கும்

மாயகம் சூழ்ந்து வரவல்ல ராகிலும்

வேயன தோளிக்கு வேந்தொன்றும் தானே. 42


அரனடி சொல்லி அரற்றி அழுது

பரனடி நாடியே பாவிப்ப நாளும்

உரன்அடி செய்துஅங்கு ஓதுங்கவல் லார்க்கு

நிரன்அடி செய்து நிறைந்துநின் றானே. 43


போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி

போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி

போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி

போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே. 44


விதிவழி அல்லதுஇவ் வேலை உலகம்

விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை

துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்

பதிவழி காட்டும் பகலவ னாமே. 45


அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று

சிந்தைசெய் வண்ணம் திருந்தடி யார்தொழ

முந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று

புந்தி வண்ணன்எம் மனம்புகுந் தானே. 46


மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்

நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்

பனையுள் இருந்த பருந்தது போல

நினையாத வர்க்கில்லை நின்இன்பந் தானே. 47


அடியார் பரவும் அமரர் பிரானை

முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்

படியால் அருளும் பரம்பரன் எந்தை

விடியா விளக்கென்று மேவிநின் றேனே. 48


நரைபசு பாசத்து நாதனை உள்ளி

உரைபசு பாசததுஒருங்கவல் லார்க்குத்

திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக்

கரைபசு பாசம் கடநது எய்த லாமே. 49


சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று

பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்

றாடுவன் ஆடி அமரர்ப்பி ரான்என்று

நாடுவன் நான்இன் றறிவது தானே. 50



2.. வேதச் சிறப்பு

(வேதத்தின் பெருமை)


வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தின்

ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க

வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற

வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே. 1


வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்

வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட

வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்

வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே. 2






இருக்குஉரு வாம்எழில் வேதத்தின் உள்ளே

உருக்குஉணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி

வெருக்குஉரு வாகிய வேதியர் சொல்லும்

கருக்குஉரு வாய்நின்ற கண்ணனும் ஆமே. 3


திருநெறி யாவது சித்தசித் தன்றிப்

பெருநெறி யாய பிரானை நினைந்து

குருநெறி யாம்சிவ மாம்நெறி கூடும்

ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே. 4


ஆறங்க மாய்வரும் மாமறை ஓதியைக்

கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை

வேறங்க மாக விளைவுசெய்து அப்புறம்

பேறங்க மாகப் பெருக்குகின் றாரே. 5


பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்

ஆட்டும் அறாத அவனியில் மாட்டாதார்

வேட்டு விருப்பார் விரதமில் லாதவர்

ஈட்டும் இடஞ்சென்று இகலல்உற் றாரே. 6


.3.. ஆகமச் சிறப்பு

(ஆகமத்தின் பெருமை)


அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்

அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்

அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்

அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே. 1






அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்

எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்

விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்

எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே. 2


பண்டிதர் ஆவார் பதினெட்டும் பாடையும்

கண்டவர் கூறும் கருத்தறி வார்என்க

பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்

அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே. 3


அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்

விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி

தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்

எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே. 4


பரனாய் பராபரம் காட்டி உலகில்

தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்

தரனாய் அமரர்கள் அர்ச்சிக்கு நந்தி

உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே. 5


சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்

உவமா மகேசர் உருத்திர தேவர்

தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற

நவஆ கமமெங்கள் நந்திபெற் றானே. 6


பெற்றநல் ஆகமங் காரணம் காமிகம்

உற்றநல் வீரம் உயர்சிந்தியம் வாதுளம்

மற்றவ் வியாமளம் ஆகும்கா லோத்தரந்

துற்றநற் சுப்பிரம் சொல்லு மகுடமே. 7


அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்

எண்ணிலி கோடி தொகுத்திடும் ஆயினும்

அண்ணல் அறைந்த அறிவுஅறி யாவிடின்

எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே. 8


மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று

ஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து

ஆரிய முந்தமி ழும்உட னேசொலிக்

காரிகை யார்க்குக் கருணைசெய் தானே. 9


அவிழ்கின்ற வாறும் அதுகட்டு மாறும்

சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும்

தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்

உணர்த்தும் அவனை உணரலு மாமே. 10


.4.. குரு பாரம்பரியம் (குரு மரபு)


நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்

நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி

மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்

என்றிவர் என்னோ டெண்மரு மாமே. 1


நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்

நந்தி அருளாலே மூலனை நாடினோம்

நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்

நந்தி வழிகாட்ட நானிருந் தேனே. 2







மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்

இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்

கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு

இந்த எழுவரும் என்வழி யாமே. 3


நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள்

நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு

நால்வரும் யான்பெற்ற தெல்லாம் பெறுகென

நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே. 4


மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்

ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்

செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்

கழிந்த பெருமையைக் காட்டகி லானே. 5


எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்

செழுந்தண் நியமங்கள் செய்யுமின் என்றண்ணல்

கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே

அழுந்திய நால்வர்க்கு அருள்புரிந் தானே. 6


.5.. திருமூலர் வரலாறு

(ஆசிரியர் வரலாறு)


நந்தி திருவடி நான்தலை மேற்கொண்டு

புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்

தந்தி மதிபுனை அரனடி நாள்தொறும்

சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே. 1






செப்புஞ் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்

அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்

தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்

ஒப்பிலா எழுகோடி யுகமிருந் தேனே. 2


இருந்தஅக் காரணம் கேள்இந் திரனே

பொருந்திய செல்வப் புவனா பதியாம்

அருந்தவச் செல்வியைச் சேவித்து அடியேன்

பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே. 3


சதாசிவந் தத்துவம் முத்தமிழ் வேதம்

மிதாசனி யாதிருந் தேன்இன்ற காலம்

இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி

உதாசனி யாதுடனே உணர்ந் தோமால். 4


மாலாங்க னேஇங்கு யான்வந்த காரணம்

நீலாங்க மேனியள் நோ஢ழை யாளொடு

மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்

சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே. 5


நோ஢ழை யாவாள் நிரதிச யானந்தப்

பேருடை யாளென் பிறப்பறுத்து ஆண்டவள்

சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறை

சீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே. 6


சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்

சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறை

சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில்

சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே. 7


இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி

இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே

இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே

இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே. 8


பின்னைநின்று என்னே பிறவி பெறுவது

முன்னைநன் றாக முயல்தவம் செய்கிலர்

என்னைநன் றாக இறைவன் படைத்தனன்

தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே. 9


ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு

ஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள்

ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து

நானும் இருந்தேன்நற் போதியின் கீழே. 10


செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன்

வெல்கின்ற ஞானத்து மிக்கேள் முனிவராய்ப்

பல்கின்ற தேவர் அசுரர்நரர் தம்பால்

ஒல்கின்ற வான்வழி யூடுவந் தானே. 11


சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்

உத்தம மாகவே ஓதிய வேதத்தின்

ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி

அத்தன் எனக்குஇங்கு அருளால் அளித்ததே. 12


யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்

வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்

ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்

தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே. 13


பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்

சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி

மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை

உறைப்பொடுங் கூடிநின்று ஓதலு மாமே. 14


அங்கிமி காமைவைத் தானுடல் வைத்தான்

எங்குமி காமைவைத் தான்உலகு ஏழையும்

தங்குமி காமைவைத் தான் தமிழ்ச் சாத்திரம்

பொங்கிமி காமைவைத் தான்பொருள் தானுமே. 15


அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்

படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி

அடிகண் டிலேன் என்று அச்சுதன் சொல்ல

முடிகண்டேன் என்று அயன் பொய்மொழிந் தானே. 16


பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற

தற்பரன் கற்பனை யாகும் சராசரத்து

அற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்

நற்பத முமளித் தானெங்கள் நந்தியே. 17


நேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை

மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை

ஆயத்தை யச்சிவன் தன்னை யாகோசர

வீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே. 18


விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதி

அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி

துளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்து

வளப்பில் கயிலை வழியில்வந் தேனே. 19


நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்

நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன்

நந்தி அருளால்மெய்ஞானத்துள் நண்ணினேன்

நந்தி அருளாலே நானிருந் தேனே. 20


இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி

அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்

அருக்கனும் சோமனும் ஆரழல் வீச

உருக்கிய ரோமம் ஒளிவிடுந் தானே. 21


பிதற்றுகின் றேனென்றும் பேர்நந்தி தன்னை

இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும்

முயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானை

இயற்றிகழ் சோதி இறைவனு மாமே. 22


.6.. அவையடக்கம்


ஆரறி வார் எங்கள் அண்ணல் பெருமையை

யாரறி வார்இந்த அகலமும் நீளமும்

பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்

வேரறி யாமை விளம்புகின் றேனே. 1


பாடவல் லார்நெறி பாட அறிகிலேன்

ஆடவல் லார்நெறி ஆட அறிகிலேன்

நாடவல் லார்நெறி நாட அறிகிலேன்

தேடவல் லார்நெறி தேடகில் லேனே. 2


மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்

இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்

பின்னை உலகம் படைத்த பிரமனும்

உன்னும் அவனை உணரலு மாமே. 3


தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை

முத்திக்கு இருந்த முனிவரும் தேவரும்

இத்துடன் வேறா இருந்து துதிசெயும்

பத்திமை யால் இப் பயனறி யாரே. 4



7.. திருமந்திரத் தொகைச் சிறப்பு


மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்

ஞாலம் அறியவே நந்தி அருளது

காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்

ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே. 1


வைத்த பரிசே வகைவகை நன்னூலின்

முத்தி முடிவிது மூவா யிரத்திலே

புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது

வைத்த சிறப்புத் தருமிவை தானே. 2


8.. குரு மட வரலாறு


வந்த மடம்ஏழும் மன்னும்சன் மார்க்கத்தின்

முந்தி உதிக்கின்ற மூலன் மடம்வரை

தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்

சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே. 1


கலந்தருள் காலாங்கர் தம்பால்அ கோரர்

நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர்

புலங்கொள் பரமானந் தர்போக தேவர்

நிலந்திகழ் மூவர் நிராமயத் தோரே. 2



9.. திரு மும்மூர்த்திகளின் முறைமை


அளவில் இளமையும் அந்தமும் ஈறும்

அளவியல் காலமும் நாலும் உணா஢ல்

தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்

அளவில் பெருமை அரியயற் காமே. 1


ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்

ஆதிக் கமலத்து அலர்மிசை யானும்

சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றெனார்

பேதித் துலகம் பிணங்குகின் றார்களே. 2


ஈசன் இருக்கும் இருவினைககு அப்புறம்

பீசம் உலகல் பெருந்தெய்வம் ஆனது

ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்

தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே. 3


சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்த

அவைமுதல் ஆறிரண்டு ஒன்றோடு ஒன் றாகும்

அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்

சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே. 4


பயன் அறிந்து அவ்வழி எண்ணும் அளவில்

அயனொடு மால்நமககு அன்னியம் இல்லை

நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்

வயனம் பெறுவீர் அவ் வானவ ராலே. 5


ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்

பாலொத்த மேனி பணிந்தடி யேன் தொழ

மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ

ஞாலத்து நம்மடி நல்கிடுஎன் றானே. 6


வானவர் என்றும் மனிதர் இவர் என்றும்

தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது

தானமர்ந்து ஓரும் தனித்தெய்வம் மற்றில்லை

ஊனமர்ந் தோரை உணர்வது தானே. 7


சோதித்த பேரொளி மூன்று ஐந்து எனநின்ற

ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்

நீதிக்கண் ஈசன் நெடுமால் அயனென்று

பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே. 8


பரத்திலே ஒன்றாய் உள் ளாய்ப்புற மாகி

வரத்தினுள் மாயவ னாய்அய னாகித்

தரத்தினுள் தான்பல தன்மைய னாகிக்

கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே. 9


தானொரு கூறு சதாசிவன் எம்மிறை

வானொரு கூறு மருவியும் அங்குளான்

கோனொரு கூறுஉடல் உள்நின்று உயிர்க்கின்ற

தானொரு கூறு சலமய னாமே. 10



--0--




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக